மிஷ்கின் ...MissedKin

தமிழ் மக்களின் வாழ்க்கையைப் படம்பிடித்து உலகத்தர சினிமாக்கள் வழங்கியவர்கள் என்று பாரதிராஜா, மகேந்திரன், வெற்றிமாறன் போன்றவர்களைச் சொல்ல முடியும். ஆனால் சில நல்ல ஷாட்கள், கவித்துவமான சில காட்சிகள், ஆங்காங்கே இலக்கிய அடையாள உதிர்ப்பு ஆகியவற்றின் மூலம் ‘உலக சினிமா’வை உருவாக்கிவிட முடியும் என்று நம்புபவர் மிஷ்கின்.
 எந்த நிலத்துக்கான சினிமா எடுக்கிறாரோ, அந்த நிலத்தின் மணல்துகள்கள் அவர் படங்களில் இருப்பதில்லை.
மிஷ்கினின் பெரும்பாலான படங்களின் கதைகள் சென்னையில்தான் நடக்கும். ஆனால் அதில் சென்னையின் உக்கிரமான வெயில் இருக்காது. மிஷ்கின் ஒவ்வொரு பார்வையாளருக்கும் கூலிங்கிளாஸ் மாட்டிவிட்டிருப்பார்; அவரும் மாட்டிக்கொள்வார். 
அவர் படங்களில் சென்னையின் நெரிசல் மிகுந்த, பரபரப்பான போக்குவரத்து இருக்காது. பெண்களைக் கடத்துவதற்கு வசதியாக, தெருக்கள் எல்லாம் காலியாக, இருபுறம் பச்சைநிற குப்பைத்தொட்டிகளுடன் காட்சியளிக்கும். அந்தப் பச்சைநிற குப்பைத்தொட்டிக்கான குறியீடு, ‘லாஜிக்கைத் தூக்கி குப்பையில் போடு’ என்பதே.

மிஷ்கின் படத்தில் பட்டப்பகலில் பிக்பாஸ் ஒளிபரப்பாகும். ஒரு பணக்கார குடும்பம், ஒரே ஒரு மகன், பார்வையற்றவன், அவனை சிங்கம்புலியிடம் அம்போ என்று விட்டுவிட்டு கனடாவில் பெற்றோர்கள் என்னதான் செய்வார்கள்? கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவனின் பெயர் அங்குலிமாலா, அவன் வைத்திருக்கும் பன்றிப்பண்ணையின் பெயர் ‘சாந்தி பன்றிப்பண்ணை’. ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

மிஷ்கினின் படங்கள் நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கத்தைத் தாண்டிக் கீழே இறங்கி வருவதில்லை. அந்த வர்க்கத்தின் வாழ்க்கையும் இயல்புடன் சித்திரிக்கப்படுவதில்லை. பிச்சைக்காரர்கள், திருநங்கைகள், பாலியல் தொழிலாளர்கள் கழிவிரக்கம் கோரி செயற்கை பாவனை செய்வார்கள். சைக்கோ கொலைகாரனை, எந்த க்ளூவும் கிடைக்காமல் காவல்துறை பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருக்கும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறைக்குக் கிடைக்கும் க்ளூ, ‘அவன் க்ளீன் ஷேவ் பண்ணியிருப்பான்’ என்பது. சிசிடிவி கேமராவே இல்லாத உலகம் மிஷ்கினின் படைப்புலகம்.
உலக சினிமாவில் தர்க்கம் பார்ப்பதா என்று பாப்கார்ன் அதிர சிலர் கோபிக்கக்கூடும். சரி தர்க்கம் வேண்டாம், வலுவான தத்துவமாவது இருக்கிறதா?
மிஷ்கின் படங்கள் மனித வாழ்க்கையின் பல பரிமாணங்களைக் காட்டுவதைப் போல பாவனை செய்பவை. ஆனால் அடிப்படையில் அவை நல்லவன், கெட்டவன், திருடன், போலீஸ், பிசாசு, தேவதை, ஓநாய், ஆட்டுக்குட்டி, எம்.ஜி.ஆர், நம்பியார் என்று இருமை எதிர்வுகளில் நிறுத்துபவைதான்.
தமிழகத்தில் வசிக்கும் ஒருவர் சாதி, மதம், பாலினம், வட்டாரம், வர்க்கம் எனப் பல அடையாளங்களில் சூழப்பட்டவர். அவருடைய வாழ்க்கைச் சிக்கல் பல பரிமாணங்கள் கொண்டது. ஆனால் மிஷ்கின் படத்திலோ மொன்னையான இரு தரப்புகள், இந்தத் தரப்பில் சில அன்பு, அந்தத் தரப்பில் சில அன்பு. நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான யுத்தம், இறுதியில் நன்மையே வெல்லும். அவ்வளவுதான். உலக இலக்கியம் படித்து, உலக சினிமாக்கள் பார்த்து மிஷ்கின் மீண்டும் மீண்டும் படைப்பது தத்துவ பாவனை பூசப்பட்ட ஈசாப் நீதிக்கதைகளையே.
கமலாதாஸ், சில்வியா பிளாத் போன்ற இலக்கியப் பெயர்களைத் தூவிவிட்டால் புத்திசாலிப் பாவனை. போதாக்குறைக்கு சாரு நிவேதிதா, பவா செல்லத்துரை, ஷாஜி போன்றவர்களை சில உதிரிப்பாத்திரங்களில் நடிக்க வைத்துவிட்டால் இலக்கியப் பாவனை. சாதியச் சிக்கல்களையும் முரண்களையும் நேரடியாகப் பேசக்கூடிய படங்கள் வரும் காலத்தில், “சாதிவெறியில் கொலை செய்றவனும் சைக்கோதான்; மதவெறியில் கொலை செய்றவனும் சைக்கோதான்” என்று விஜயகாந்த் காலத்து வசனம் வைக்கிறார் மிஷ்கின். ஏனென்றால் அதை அவரால் சித்திரிக்க முடியாது.
எதார்த்தத்தில் காவல்துறை அடக்குமுறைக்கருவி, தந்திரங்கள் நிறைந்தது. ஆனால் மிஷ்கின் படங்களிலோ அது சாதுவான அப்பாவி மிருகம். அவரது எந்தப் படங்களிலும் காவல்துறை ஒடுக்குமுறை காட்சிப்படுத்தப்பட்டதில்லை. ‘சைக்கோ’வில் ஏ.எம்.ராஜா பாட்டுப்பாடியபடி தலை வெட்டுப்பட்டுச் சாகிறார் ஒரு போலீஸ் அதிகாரி.
அங்குலிமாலா, பௌத்தம், ஜென், கமலாதாஸ், கிறிஸ்துவ விக்டோரிய ஒழுக்கம் என்று விதவிதமான பாவனைகள் காட்டினாலும் அடிப்படையில் மிஷ்கின் படங்கள் எம்.ஜி.ஆர் படங்கள்தான். எம்.ஜி.ஆர் படங்களில் நாயகிகள் வில்லனிடம் ஆபத்தில் சிக்கியிருப்பார்கள். அவர்களை எம்.ஜி.ஆர் வந்து மீட்பார். ‘சைக்கோ’விலும் நாயகி, “கௌதம் வந்து மீட்பான்” என்று வில்லனிடம் புன்னகைக்கிறாள்.
‘பிசாசு’ படத்தில் பிசாசு தன் மனைவியை அடித்து உதைப்பவனை மாடிப்படியில் இருந்து உருட்டிவிடும்; தன் காதலனை பீர் அடிக்க விடாமல் பாட்டிலை உடைத்துவிடும்; அப்பா புகைபிடிக்கக்கூடாது என்று சிகரெட் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு ஓடும். இதெல்லாம் எம்.ஜி.ஆர் படங்களில் அவர் வழக்கமாகச் செய்பவை. இதை ‘பிசாசு’ செய்தது மட்டும்தான் எம்.ஜி.ஆர் படத்துக்கும் மிஷ்கினின் உலக சினிமாவுக்கும் உள்ள வித்தியாசம். என்ன ஒன்று, மிஷ்கின் பட நாயகர்கள் பெண்களை மீட்டுவிட்டு, ‘நான் என் கடமையைத்தானே செஞ்சேன்’ என்று டயலாக் பேச மாட்டார்கள். அதற்குப் பதிலாக கொஞ்ச நேரம் குனிந்துநிற்பார்கள்.
படைப்பூக்கமுள்ள படைப்பாளிகள் பன்மைத்துவ பாத்திரங்களைப் படைத்து அதன் வழியாக வாழ்க்கையின் சிக்கலான முரணியக்கத்தைச் சித்திரிப்பார்கள். ஆனால் மிஷ்கினோ வெவ்வேறு உடல்களின் வெவ்வேறு உடல்மொழிகளை, பாவனைகளைக் கொன்றொழித்துவிட்டு ஒரேமாதிரியான உடல்மொழியை எல்லா உடல்களுக்குள்ளும் திணிப்பார். ஒரே அச்சில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பிள்ளையார் சிலை செய்யும் தொழிலாளியைப் போல, திரைக்குப் பின்னால் நூலைப் பிடித்து தோற்பாவைகளை ஆட்டிவைக்கும் பொம்மலாட்டக்காரரைப் போன்றவர் மிஷ்கின்.
‘பிசாசு’ படத்தில் பிசாசு தன் மனைவியை அடித்து உதைப்பவனை மாடிப்படியில் இருந்து உருட்டிவிடும்; தன் காதலனை பீர் அடிக்க விடாமல் பாட்டிலை உடைத்துவிடும்; அப்பா புகைபிடிக்கக்கூடாது என்று சிகரெட் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு ஓடும். இதெல்லாம் எம்.ஜி.ஆர் படங்களில் அவர் வழக்கமாகச் செய்பவை. இதை ‘பிசாசு’ செய்தது மட்டும்தான் எம்.ஜி.ஆர் படத்துக்கும் மிஷ்கினின் உலக சினிமாவுக்கும் உள்ள வித்தியாசம். என்ன ஒன்று, மிஷ்கின் பட நாயகர்கள் பெண்களை மீட்டுவிட்டு, ‘நான் என் கடமையைத்தானே செஞ்சேன்’ என்று டயலாக் பேச மாட்டார்கள். அதற்குப் பதிலாக கொஞ்ச நேரம் குனிந்துநிற்பார்கள்.
படைப்பூக்கமுள்ள படைப்பாளிகள் பன்மைத்துவ பாத்திரங்களைப் படைத்து அதன் வழியாக வாழ்க்கையின் சிக்கலான முரணியக்கத்தைச் சித்திரிப்பார்கள். ஆனால் மிஷ்கினோ வெவ்வேறு உடல்களின் வெவ்வேறு உடல்மொழிகளை, பாவனைகளைக் கொன்றொழித்துவிட்டு ஒரேமாதிரியான உடல்மொழியை எல்லா உடல்களுக்குள்ளும் திணிப்பார். ஒரே அச்சில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பிள்ளையார் சிலை செய்யும் தொழிலாளியைப் போல, திரைக்குப் பின்னால் நூலைப் பிடித்து தோற்பாவைகளை ஆட்டிவைக்கும் பொம்மலாட்டக்காரரைப் போன்றவர் மிஷ்கின்.
வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு உடல்மொழிகள், வெவ்வேறு பாவனைகள், வெவ்வேறு மனநிலைகள் என பன்மைத்துவமே மனித வாழ்க்கையின் அழகு. பாசிசமோ பன்மைத்துவத்தை விரும்புவதில்லை. அது பன்மைத்துவத்தை அழித்து. வித்தியாசங்களைத் தகர்த்து ஒற்றைத்தன்மையை நிறுவ விரும்புகிறது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டு என்று மதவாத பாசிசம் சொன்னால் ‘ஒரே உடல்; ஒரே உடல்மொழி’ என்கிறார் மிஷ்கின். மிஷ்கின் மற்றும் மணிரத்னத்தின் படங்கள் வித்தியாசத்தை அழித்து, ஒற்றைத்தன்மையைப் போலியாகப் பாத்திரங்களுக்குள் திணிக்கும் பாசிச மனநிலை கொண்டவை.
மிஷ்கின் படங்களில் இன்னோர் ஆபத்தும் உண்டு. பெண்கள் கல்வி கற்க வந்த தொடக்க காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர் படங்கள் ‘பொம்பளை சிரிச்சாப் போச்சு’, ‘இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளை’ என்று பிற்போக்குப் பாடல்கள் பாடின. படித்த பெண்களை அகங்காரம் உள்ளவர்களாகக் காட்டின. மிஷ்கின் படங்களோ ‘நீ வீட்டைவிட்டு வெளியில் வந்தால் கடத்தப்படுவாய், கொல்லப்படுவாய்’ என்று மீண்டும் மீண்டும் பயமுறுத்துகின்றன.
பெண்களுக்குப் பாதுகாப்பு, பாலியல் அச்சுறுத்தல்கள் போன்ற பிரச்னைகள் இருப்பது உண்மைதான். ஆனால் பெண்கள் அதை எதிர்கொள்வது போன்றோ சமூக மாற்றங்கள் குறித்தோ மிஷ்கின் படங்கள் பேசுவதில்லை. எப்போதும் பெண்களை மீட்பது உடல் வலிமை அல்லது அறிவு வலிமையுள்ள ஆண்களின் கடமை. எந்தப் பெண்ணும் தன்னைத் தற்காத்துக்கொள்ள, ஆபத்தை எதிர்கொள்ள எந்தப் பிரயத்தனமும் செய்வதில்லை. இருக்கும் ஒரே ஒரு துணிச்சலான பெண்ணையும் படிக்கட்டிலிருந்து தள்ளி, சக்கர நாற்காலியில் முடக்கிப்போடுகிறார் மிஷ்கின். ஒருகட்டத்தில் சைக்கோ, நாயகியின் சங்கிலியை அவிழ்த்துவிட்டுச் சுதந்திரமாக நடமாட விட்டாலும் அவள் தப்பிப்பதற்கு எந்த முயற்சியும் செய்வதில்லை. ‘கௌதம் வந்து காப்பாற்றுவான்’ என்று காத்திருக்கிறாள்.
கிறிஸ்துவ விக்டோரிய ஒழுக்க விதிகளைக் கேள்விக்குள்ளாவது நல்ல விஷயம்தான். ஆனால் சுய இன்பத்தைச் சொல்லிவிட்டால் அது புதுமையான உலக சினிமா என்று நினைத்துக்கொள்கிறார் மிஷ்கின். ஆனால் அந்தக் கலாச்சார அதிர்ச்சிகளை எல்லாம் தமிழ் சினிமா தாண்டிவந்துவிட்டது. குமாரசாமி தியாகராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ பாலியல் மீறல்களை விரிவாகப் பேசுகிறது. ஆனால் மிஷ்கினோ ‘பேண்ட் ஜிப் மாட்டிக்கிச்சு’ என்று நிற்கிறார். ‘சில்லுக்கருப்பட்டி’யில் ஓர் இளைஞனின் சுய இன்பம் குறித்து ஓர் இளம்பெண் பேசக்கூடிய காட்சிகளில் எவ்வளவு எதார்த்தமும் கலைத்தன்மையும் இருக்கிறது. ஆனால் ‘சைக்கோ’விலோ பாவனைகள் மட்டுமே இருக்கின்றன. பிளாஸ்டிக் பாவனைகள்.
எம்.ஜி.ஆர் படங்கள் எல்லாம் உருமாற்றப்பட்ட நீதிக்கதைகள். மிஷ்கின் படங்களோ உருமாற்றப்பட்ட எம்.ஜி.ஆர் படங்கள். ஆனால் எம்.ஜி.ஆர் படங்களில் இவ்வளவு அபத்தமான காதல் காட்சிகள் ஒருபோதும் இருந்ததில்லை.
கௌதம் வாசுதேவ் மேனனிடம்கூட அலுத்துப்போன காதல் கதை, உளுத்துப்போன போலீஸ் கதை என இரண்டு கதைகள் இருக்கின்றன. ஆனால் மிஷ்கினிடமோ பாவம், ஒரே ஒரு எம்.ஜி.ஆர் கதைதான் இருக்கிறது. அதுவும் பிளாஸ்டிக் எம்.ஜி.ஆர் கதை. மீண்டும் மீண்டும் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் எம்.ஜி.ஆர் கதை

 Thanks Vinavu.

https://www.youtube.com/watch?v=TYapfGgvAyQ -See this as well. Mysskin's reply.
Image result for mysskin


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்